Category Archives: சிவ ஆலயங்கள்

சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை, தஞ்சாவூர் மாவட்டம் .

காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
அம்மன் சவுந்தரநாயகி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நெய்க்கூபம்
ஊர் நெய்க்குப்பை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பசுபதிநாதரான சிவபெருமான், உமையவளின் மூலமாக, பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத்தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களைப் பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள். வேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந்தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கிவிட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக்கத்திலும், தான் மறையும் நேரத்தை, சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் தம்பித்துவிட்டன. சூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந்தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக்கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்றுவிட்டன.

சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி, மதுரை மாவட்டம்.

+91- 98436 37301, 96268 32131

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரமகாலிங்க சுவாமி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சதுரகிரி
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய இலிங்கம். சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஒடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு இரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே இரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன்,”யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும்என்று கூறிவிட்டு இலிங்கமாகி மறைந்துவிட்டார்.