Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம், தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 240 632 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்பக நாதர்
அம்மன் பாலசுந்தரி
தல விருட்சம் பலா
தீர்த்தம் விநாயகர் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கடிக்குளம்
ஊர் கற்பகநாதர்குளம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

கார்த்திகாசுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர்என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இத்தல சிவபெருமான் 8 முக பட்டை இலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர். இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர்என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்

அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம், திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 240 349, 240 200 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சற்குணநாதர்
அம்மன் மங்களநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்வாரண்யம், திருஇடும்பாவனம்
ஊர் இடும்பாவனம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவரது சத்வ குணம் குறைந்தது. இதனால் வருந்திய பிரம்மா பூமியில் பல சிவத்தலங்களுக்கு சென்று தன் குறை நீங்கி சாத்வீக குணம் ஏற்பட வழிபாடு செய்தார். இவரது கவலையை போக்க இறைவன் திருவுளம் கொண்டு, இத்தலத்தில் பார்வதி சமேதராக விநாயகர், முருகப்பெருமானுடன் தோன்றி பிரம்மனின் குறை போக்கி அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன் சத்குணநாதர்ஆனார். பெரும் மகிழ்ச்சியடைந்த பிரம்மா கோயில் எதிரில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி, வைகாசி விசாகத்தில் பிரமோற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார்.