Tag Archives: திருப்பைஞ்ஞீலி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி மாவட்டம்.

+91- 431 – 2560 813 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஞீலிவனேஸ்வரர்
அம்மன் விசாலாட்சி, நீலநெடுங்கண்நாயகி
தல விருட்சம் கல்வாழை
தீர்த்தம் 7 தீர்த்தங்கள்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வாழைவனம், சுவேத கிரி, லாலிகெடி
ஊர் திருப்பைஞ்ஞீலி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர்

பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், “நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர். பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக இலிங்க வடிவில் எழுந்தருளினார். இங்கு வாழை மரமே தலவிருட்சம். திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டிப் பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருக்கடையூரில் எமனைக் காலால் உதைத்து சம்காரம் செய்தார் சிவன். இதனால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள். ஒரு தைப்பூச தினத்தன்று சிவன், இத்தலத்தில் எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார். இதன் அடிப்படையில் இங்கு பிரகாரத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் சிவன், அம்பாள் மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க, சுவாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இச்சன்னதி குடவறையாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர். எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர். கோயில் ராஜகோபுரத்தை ராவணன் வாயில்என்கின்றனர். இக்கோபுரத்திற்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கிறது. இந்தப் படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்கிறார்கள்.