Tag Archives: குன்றத்தூர்

அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436, 98401 58781 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருஊரகப்பெருமாள்

தாயார்

திருவிருந்தவல்லி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குன்றத்தூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் குலோத்துங்க சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருசமயம் அவனுக்கு தோஷம் உண்டானது. பல தலங்களில் பரிகாரம் செய்தும் பலனில்லை. ஒருநாள் திருமால் அவனது கனவில் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அவ்விடத்தில் வந்து வழிபட தோஷ நிவர்த்தி பெறும் என்றும் கூறினார். அதன்படி மன்னன் காஞ்சிபுரம் சென்று, திருஊரகம் அடைந்தான். அங்கு, பெருமாள் ஆதிசேஷன் வடிவில் இருந்ததைக் கண்டான். அதுவரையில் பெருமாளை, முழு உருவத்துடன் பார்த்திருந்த மன்னனுக்கு தான் சரியான கோயிலுக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே அன்றிரவில் அங்கேயே தங்கினான். அன்றும் அவனது கனவில் தோன்றிய பெருமாள், தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியிருப்பதாக உணர்த்தினார். அதன்பின் ஊரகப் பெருமாளை தரிசித்த மன்னன், தோஷம் நீங்கப்பெற்றான். பின்பு பெருமாளுக்கு நன்றிக்கடனாக இத்தலத்தில் ஒரு கோயில் கட்டினான். அப்போது பெருமாள் அவனுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் காட்சி கொடுத்தார். எனவே அதே அமைப்பிலேயே இங்கு பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு,”திருஊரகப்பெருமாள்என்று பெயர் சூட்டினான்.

அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436, 93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் தரிசிக்க, முன்னரே போனில் தொடர்பு கொண்டு விட்டுச் செல்லலாம்.

மூலவர் சேக்கிழார்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்றத்தூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை சோழமன்னன் அனபாயன் ஆண்டு வந்தான். அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழி இராமதேவர், குலத்தின் பெயரால் சேக்கிழார் என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவருக்கு உத்தமசோழபல்லவர்என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரின் பக்தராக இருந்த சேக்கிழார், அக்கோயில் அமைப்பிலேயே இவ்வூரிலும் ஒரு கோயில் கட்டினார்.

ஒருசமயம் சிவபக்தனான மன்னன், சமண மதத்தின் மீது நாட்டம் கொண்டு, சமண மத நூல்களை படித்து வந்தான். மன்னனை திருத்த எண்ணிய சேக்கிழார் அவனிடம், சிவன் அடியவர்களுக்கு காட்சி தந்த பெருமைகளைச் சொல்லும் நூல்களை படிக்கும்படி அறிவுறுத்தினார். சேக்கிழாரின் சொல் கேட்ட மன்னன், தனக்கு சிவனின் பெருமைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சிவனருள் பெற்ற நாயன்மார்களின் வரலாறைக் கூறினார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.