Tag Archives: திருநெடுங்களம்

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம்

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம், திருச்சி மாவட்டம்.

+91- 431-252 0126 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி
தல விருட்சம் வில்வம், கஸ்தூரி, அரளி
தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெடுங்களம்
ஊர் திருநெடுங்குளம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம்என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார். கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறிக் காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.