Tag Archives: கைவிளாஞ்சேரி

அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி

அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா (கைவிடேயப்பர்)
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கைவிளாஞ்சேரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திர லோகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி மறைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரைப் பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி, அழகே உருவான இந்திராணியைத் தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், அஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான அஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது கைவிளாஞ்சேரிஎன அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்திராணியைக் கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு கைவிடேயப்பர்என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.