Tag Archives: திருவாய்ப்பாடி

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94421 67104 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாலுகந்தநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் ஆத்தி
தீர்த்தம் மண்ணியாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீராக்கண், திருஆப்பாடி
ஊர் திருவாய்பாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி, தன்னை மேய்க்கும் இடையனை முட்டப் பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது.


விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார்.
சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்எனக் கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர்ஆக்கினார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்பு.

அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி

அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி, கோகுலம், தில்லி

கிருஷ்ணர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். மதுராவிலுள்ள கிருஷ்ணன் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் ஆயர்ப்பாடியில் தான் என்பதால் கிருஷ்ணனை முழுமையாக அனுபவித்துப் பார்த்தவர்கள் இங்கு தான் அதிகம். இதற்கு மற்றொரு பெயர் கோகுல் அல்லது கோகுலம் என்று அழைக்கப்படுகிறது.

மதுரா நகரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் திருவாய்பாபாடி காணப்படுகிறது. யமுனை நதியைக் கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் திருவாய்ப்பாடி என்ற ஊர் உள்ளது. மூலவர் மோகன கிருஷ்ணன். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ருக்மணி, சத்யபாமா பிராட்டியார்கள். தீர்த்தம் யமுனா நதி. விமானம் ஹேமகூட விமானம். நந்தகோபருக்கு கிருஷ்ணர் நேரிடையாகத் தரிசனம் தந்த இடம்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களும் உருவச் சிலைகளும் இப்போது இல்லை புராண கோகுல் என்று ஒன்றுண்டு. கோயில் வாசலில் யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா பலராமர் விக்ரகங்களுக்கடியில் குழந்தையாக கிருஷ்ணனை ஒரு மரத் தொட்டிலில் வைத்திருக்கிறார்கள். மற்றபடி பஞ்சலோக விக்ரகங்கள் எதுவுமில்லை.

பரிகாரம்:
குழந்தை இல்லாதவர்களும் நோயினால் வறுமையினால் அவதிப்படும் குழந்தைகளைப் பெற்றவர்களும் இந்த திருவாய்ப்பாடி கோயிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை சேவித்தால் அவர்களுடைய புத்திர பாக்கியம் வலுப்பெறும். குழந்தைகளும் நோய்நொடி வறுமைப் பிணி இல்லாமல் வாழ்வார்கள்.