Tag Archives: பொன்னூர்

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருக்காமீஸ்வரர்

தாயார்

சாந்த நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பொன்னூர்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னூரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவனுக்கு பிரம்மேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட சிறப்புடையது. சுந்தரரும் பொன்னார் நாட்டுப் பொன்னார் என இப்பகுதியைப் போற்றுகின்றனர். பராசர முனிவர் இங்கு தவமிருந்து இத்தல பெருமானை பூஜித்து, பேறு பெற்றுள்ளார். சிவன் சன்னதியும் அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், பாண்டூர் போஸ்ட் வழி நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 4364 250 758, 250 755 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், இலிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், இரதீசுவரர்
அம்மன் பெரியநாயகி, பிருகந்நாயகி
தல விருட்சம் எலுமிச்சை
தீர்த்தம் அக்னி, வருண தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅன்னியூர்
ஊர் பொன்னூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான்.

தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களைக் காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால், மன்மதனின் உதவியால் அவரது யோகத்தைக் கலைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய இரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர், தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணித் தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு இரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார்.

இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர்என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, இரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கும் விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.