Category Archives: கர்நாடகா

அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம்

அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம், பெங்களூரு மாவட்டம், கர்நாடக மாநிலம்.

+91- 80- 2523 7234 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் காளிகாம்பாள்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் விபூதிப்புரம்
மாவட்டம் பெங்களூர்
மாநிலம் கர்நாடகா

இப்பகுதியை வீரபல்லாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான இவனுக்கு, சிவனை அவரது அம்சமான வீரபத்திரர் வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி சிவனிடம் வேண்டி தியானத்தில் ஆழ்ந்தான். அவனது பக்தியை மெச்சிய சிவன், அவனது மனதில் பிரசன்னமாகி வீரபத்திரராக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன், தான் கண்ட வடிவில், வீரபத்திரருக்கு சிலை வடித்தான். அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினான். விபூதிப்புரம் வீரசிம்மாசன சமஸ்தான மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வடக்கு நோக்கிய கோயில் இது. சிவனே வீரபத்திரராக மன்னனுக்கு காட்சி தந்ததால் அவருக்கு, சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சிவனைப் போலவே இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர். சிவனுக்குரிய ஆயுதங்களான சூலம் மற்றும் உடுக்கையும் இருக்கிறது. இடது கையில் தட்சனின் தலையை வைத்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் வணங்கியபடி இருக்கின்றனர். வீரபத்திரருக்கு பின்புறம், ஒரு பீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. சன்னதிக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ளதான அமைப்பு காண்போரை வியக்க வைக்கிறது. சிவலிங்கத்துடன் காட்சி தருவதால் இவரை, “இலிங்க வீரபத்திரர்என்றும் அழைக்கிறார்கள். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவர் வீரபத்திரரும் நந்தி வாகனத்துடன் இருக்கிறார்.

அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி

அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா.

+91- 80 – 2661 8899 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரளயகால வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கல்யாணி தீர்த்தம்
ஆகமம் வீர சைவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கவிப்புரம் குட்டஹள்ளி
மாவட்டம் பெங்களூரு
மாநிலம் கர்நாடகா

சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர், யாகத்தை அழித்து, அவிர்பாகம் (யாகத்தின் பலன்) ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். அப்போது, 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32 கைகளுடன் பிரளயகால வீரபத்திரர்சிலை வடித்து, கோயில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னியதைக் கண்டான். புதரை விலக்கியபோது, 32 கை வீரபத்திரர் சிலையைக் கண்டான். பின், அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் எழுப்பினான்.

குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.