Tag Archives: திருவோத்தூர்

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர், திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4182-224 387 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன் இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவோத்தூர், திருஓத்தூர்
ஊர் செய்யாறு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர், திருநாவுக்கரசர்

தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். “ஓத்துஎன்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை இங்கு இறைவன் ஓதுவித்தான். சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர்என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர்என்று வழங்கப்படுகிறது. தற்போது திருவத்திபுரம்என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் 9 வாயில்களை கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேடம். இரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதால் பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேரத் தரிசிக்க முடியும். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.