Tag Archives: திருக்கண்டியூர்

காளத்தியப்பர் கோவில், திருக்கண்டியூர்

அருள்மிகு காளத்தியப்பர் கோவில், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்.


சதாதபர் என்ற முனிவர் பரமசிவனின் பரமபக்தர். எங்கிருந்தாலும் இவர் தனது யோக சக்தியால் தினமும் காலையில் தனுஷ்கோடியிலும், உச்சிக் காலத்தில் கங்கையிலும், மாலையில் திருக்காளத்தியிலும் இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த ஆலயதரிசனங்களை வழிபடத் தவறினால் தீ வளர்த்து அதில் விழுந்து மாண்டு விடுவதாகச் சபதம் செய்திருந்தார். இந்த மூன்று வேளையும் தவிர மற்ற வேளைகளில் மற்ற சிவத்தலங்களை வழிபடச் செல்வார். இப்படி அன்றாடப்பணியே ஆலய தரிசனம்தான் என்று இருந்த சதாதபர் திருக்கண்டியூர் தலத்திற்கு வந்திருந்தார். இத்தலத்தில் சுவாமிதரிசனம் செய்யத் தாமதமானதால் மாலை வேளை வந்துவிட்டது. காளத்தியப்பரை மாலை வேளையில் தரிசிக்காததால் மனம் வருந்தித் தீயில் உயிர்விடத் தீர்மானித்தார். அப்போது, அவர் முன்பு வில்வமரம் ஒன்று தோன்றியது. அதில் சிவபெருமான் உமாதேவியாருடன் காளத்திநாதராகக் காட்சிதந்து சதாதபரை ஆட்கொண்டார்.