Tag Archives: ஆலப்புழை

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-479-2410690 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முருகன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஹரிப்பாடு
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் கேரளா

சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு துளிக்கு ஒரு அசுரர் வீதம் உருவாகி உலகை நாசமாக்கினர். இத்தகைய மாயக்காரனான சூரனை அழிக்க ஏழு மாத குழந்தையால்தான் (தமிழகத்தில் சிறுவனாய் இருந்த போது சூரனை அழித்ததாகச் சொல்வோம். கேரளாவில், ஏழு மாதக் குழந்தை என்கிறார்கள்) முடியும் என்ற நிபந்தனையுடன் அவனுக்கு பிரம்மனால் வரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவாக்கிய ஆறு பொறிகள் இணைந்து, கார்த்திகேயன் என்ற குழந்தை உருவாயிற்று. இக்குழந்தையை ஏழுமாதம் வரை பார்வதி பாதுகாத்தாள். பின்னர் இக்குழந்தை பற்றி அறிந்த சூரன் அதை அழிக்க வந்தான். விஸ்வரூபம் எடுத்த அக்குழந்தை சூரனை அழித்தது. பின்னர் வளர்ந்த அக்குழந்தை பல லீலைகளைச் செய்தது. தந்தைக்கே பாடம் கற்றுக் கொடுத்தது. படைக்கும் தொழிலை சிலநாள் ஏற்றுக் கொண்டது. பல தலங்களுக்கும் சென்றது. பரசுராமர் உருவாக்கிய கேரளாவிற்கு அக்குழந்தை சென்ற போது வெற்றி வீரரான அச்சிறுவனை வாழ்த்திப் பாடல்கள் பாடி வரவேற்றார் விஷ்ணு. அப்பாடல்கள் ஹரிப்பாடல்கள்எனப்பட்டன. அவர் பாடிய இடத்திற்கு ஹரிப்பாடுஎன்ற பெயர் உண்டாயிற்று. தன் மருமகனை அத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்படி விஷ்ணு கேட்டுக் கொண்டதன்படி முருகன் அத்தலத்தில் அமர்ந்தார்.

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை – 688001, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 477 – 226 2025, 225 1756

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜராஜேஸ்வரி , முல்லைக்கல் பகவதி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆலப்புழை

மாவட்டம்:- ஆழப்புழா

மாநிலம்: – கேரளா

செண்பகசேரி அரசனுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இவ்வரசன் காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.

ஒரு முறை அந்தக் கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள், பின்னர் பிரசன்னத்தில் இவள் அன்னதானப் பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிட்டை செய்யப்பட்டாள்.

அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லைக் கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிட்டை செய்யும்படியும் கூறினார். மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிட்டை செய்யும்போது கருவறையின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது.

பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை நான் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க வேண்டுமெனவும், மேற்கூரை இல்லாமல் கருவறையை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதால் இக்கோயிலுக்கு மேற்கூரை கிடையாது.

இங்கு 5 அடி உயர அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்கிறாள்.

திருவிழாவின்போது, 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிசேகம் நடைபெறும். இங்கு கணேசர், முருகன், கிருட்டிணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம்(சந்தனம்) நடக்கும்.

மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூசை, அர்ச்சனை நடக்கும்.

மார்கழி 11ம் தேதி பீமா ஜுவல்லரி பூசை.

சரசுவதி பூசை நாட்களில் நவராத்திரித் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தினமும் பஞ்சாமிர்த அபிசேகம் நடைபெறும்.

திருமண தடை நீங்கவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றனர்.

கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்கிறார்கள்.