Tag Archives: கவிப்புரம் குட்டஹள்ளி

அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி

அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா.

+91- 80 – 2661 8899 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரளயகால வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கல்யாணி தீர்த்தம்
ஆகமம் வீர சைவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கவிப்புரம் குட்டஹள்ளி
மாவட்டம் பெங்களூரு
மாநிலம் கர்நாடகா

சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர், யாகத்தை அழித்து, அவிர்பாகம் (யாகத்தின் பலன்) ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். அப்போது, 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32 கைகளுடன் பிரளயகால வீரபத்திரர்சிலை வடித்து, கோயில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னியதைக் கண்டான். புதரை விலக்கியபோது, 32 கை வீரபத்திரர் சிலையைக் கண்டான். பின், அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் எழுப்பினான்.

குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.