Category Archives: ஜம்மு காஷ்மீர்

அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா

அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.

+91-1991-232 125 (மாற்றங்களுக்குட்பட்டது)

இது திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைக்கோயில்(பவன்). சனவரி, பிப்ரவரி மாதம் தவிர, இதர மாதங்களில் செல்லலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணவிதேவியை இலவசமாக தரிசிக்கலாம். அருள்மிகு வைஷ்ணவி தேவியைத் தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

மூலவர் வைஷ்ணவிதேவி,(சிரோ பாலி)
தீர்த்தம் கங்கா நதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கட்ரா
மாவட்டம் கட்ரா
மாநிலம் ஜம்மு & காஷ்மீர்

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால், சிவனின் சொல்லையும் மீறி, பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால், அன்னை கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.

அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது திருமால் சிவனின் கோபத்தை தணிக்க, சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றுதான் ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு.ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு மகளாக வைஷ்ணவி தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில், வைஷ்ணவி தேவியை கவர்ந்து செல்ல எண்ணி, பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளக் குகையில் ஒளிந்து கொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை வதம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வைஷ்ணவி தேவி வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை(பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்று வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பிச் செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டுச் செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணவி தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணவி தேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.