Category Archives: கேரளா

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.

+91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் உன்னி கிருஷ்ணன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் குருவாயூர்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.


வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு. ஆக எல்லா வகையிலும் உயர்ந்த தலம் குருவாயூர். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாகக் கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு, கொல்லம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 0475-221 1566, 94452 52368

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆரியங்காவு
மாவட்டம் கொல்லம்
மாநிலம் கேரளா

சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னாலான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார். திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன், “உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?” எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான். அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, “நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?” என அதிசயித்தார். பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.