Tag Archives: தெற்கு பொய்கைநல்லூர்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர்

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 99422 67660, 95785-72989

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி)

மூலவர் சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தெற்கு பொய்கைநல்லூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில், இலுப்பமரக்காடாக இருந்த நாகப்பட்டினத்தில், காவல் தெய்வத்துக்கு கோயில் கட்ட அங்கிருந்த வணிகர்கள் முடிவு செய்தனர். விக்ரகங்கள் செதுக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு தான் கோயிலுக்கான அஸ்திவாரம் பொய்கைநல்லூர் பகுதியில் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியிலிருந்து சுவாமி, முருகன் வள்ளி, தெய்வானை சிலைகளும் பரிவார மூர்த்தி சிலைகள் கிடைத்தன. கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். தற்போதைய அம்பாள் சன்னதி அருகிலுள்ள பின்ன மரத்தை வெட்டும் போது, மரப் பொந்துக்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மரப்பொந்தில் முருகன், வள்ளி, தெய்வானை என பல சிலைகள் கிடைத்தன. மரப்பொந்தில் இருந்து கிடைத்த சிலைகளை கோயிலுக்குள்ளும், ஏற்கனவே செய்து வைத்திருந்த சுவாமி சிலைகளை கோயிலுக்கு வெளியேயும் பிரதிஷ்டை செய்தனர். இந்த கோயிலின் மூலவருக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினர். இவர்கள் அருகில் செல்லியம்மன் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அம்மனுக்கு நாகம் காவலாக இருப்பதாக நம்பிக்கை. அம்மன் கோயில் கதவுக்கு முன்பக்கம் நாகம் படுத்திருப்பதாகவும், பூஜாரி கதவை திறந்தவுடன், மணி சப்தம் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபட்டு பலனடையலாம். இந்த தோஷம் நீங்கினால், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு வாழ்க்கைத்துணை விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.