Tag Archives: திருமணஞ்சேரி

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 4364 – 235 002 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உத்வாகநாதர்
அம்மன் கோகிலா
தல விருட்சம் கருஊமத்தை, வன்னி, கொன்றை
தீர்த்தம் சப்தசாகரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
ஊர் திருமணஞ்சேரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள், உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களைத் திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, ஈசனும் வரம் தந்தார்.

ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை, பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார். உமையும் சாப விமோசனம் வேண்டிப் பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து, பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் தோன்றி, உமையாளைத் திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.

சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரிமளேஸ்வரர்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணஞ்சேரி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோயிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள். காலம் சென்றது.

அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார். அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம், “அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் செய்து கொள்என்றார். அவன் அவளுக்கு அவ்விடத்திலேயே மாலை சூடினான்.