Tag Archives: பழையாறை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், பழையாறை, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 – 98945 69543 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதர்
அம்மன் சோமகலாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் சோம தீர்த்தம், கருட தீர்த்தம், சடாயு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழையாறை வடதளி, ஆறைவடதளி
ஊர் கீழ்பழையாறை வடதளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்க, தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று, இத்தலத்தின் வழியே வந்தான். இதைக்கண்ட அசுரர்களுக்கும், கருடனுக்கும் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன், தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது. சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.


சோழர் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு பார்த்த சன்னிதி. எதிரில் குளம் இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்கை உருவமும் அழகுடையன.
பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது.