Tag Archives: வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4551 – 261 265, 99526 46389 (மாற்றங்களுக்குட்பட்டவை)

சனிக்கிழமை மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரையில் நடை திறந்திருக்கும். மற்ற நாட்களில் நடை திறப்பதில்லை. முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டு விட்டு சென்றால், சுவாமியைத் தரிசிக்கலாம்.

மூலவர்

நரசிம்ம பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்

குடகனாறு

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

வேடசந்தூர்

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினர். முதலில் நரசிம்மருக்கு கோயில் அமைக்க விரும்பியதால், இந்த திருநாமத்தையே சுவாமிக்கு சூட்டினர்.

இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளுக்கு நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் இலிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.