Tag Archives: சிதலைப்பதி

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 238 818, 239 700, 94427 14055 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பொற்கொடியம்மை, சொர்ணவல்லி
தல விருட்சம் மந்தாரை
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திலதைப்பதி, திலதர்ப்பணபுரி
ஊர் சிதலப்பதி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த இராமரிடம், சீதையை, இராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, இராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் இராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார். அரசலாற்றில் நீராடி, சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர்என்றும், தலம் திலதர்ப்பணபுரிஎன்றும் பெயர் பெற்றது. “திலம்என்றால் எள்எனப்பொருள். முன் ஒரு காலத்தில், இந்த ஆலயங்கள் உள்ள இடத்தின் அருகில் ஹரி மற்றும் சிவ என்ற ஆறு ஓடிக்கொண்டு இருந்ததாம். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில், அவமானம் அடைந்த பார்வதி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கதை அனைவரும் அறிந்ததே. அவள் செய்த காரியத்தினால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டு இருந்தது. தெய்வமே என்றாலும் தீயில் விழுந்து மரணம் அடைந்தால் இறந்தவளுக்கு சமானம். அந்த பிறவியில் இறந்துவிட்ட அவளுக்கு யார் தர்ப்பணம் செய்வார்கள்? அந்த தோஷத்தைக் களைந்து கொள்ளாவிடில் அவளால் மீண்டும் சிவபெருமானின் மனைவியாக எப்படி ஆவது? ஆகவேதான், அவள் பெற்ற ஆலோசனைப்படி மந்தார மரங்கள் சூழ்ந்து இருந்த அந்த வனப்பகுதியை (தற்போது ஆலயம் உள்ள இடம்) வந்து அடைந்தாள். முன் ஒரு காலத்தில் அந்த ஹரி சிவா நதிக்கு அருகில் இருந்த அந்த வனப்பிரதேசத்தில், சிவபெருமான் பெரும் தவம் செய்து உளார். அப்போது அவர் முடியில் இருந்த கங்கையும் அவருக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று எண்ணி, அங்கு அவர் தவம் முடியும்வரை அவருக்குக் காவலாக அமர்ந்து இருந்தாள். அதனால்தான் அந்த பூமி தில தர்பணபுரி கங்கை நதி ஓடும் காசிக்கு இணையாக ஆயிற்று.