Tag Archives: சிவகங்கை

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்.

+91- 92455 28813, 99946 74433

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுந்தரராஜப் பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

ஆகமம்

பாஞ்சராத்ரம், வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிவகங்கை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தர்ராஜப் பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகப் பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார். வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தர்ராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். “சவுமியம்என்றால் அழகு.” பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் இராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம்.

+91-98439 39761

காலை 6 – 10.30 மணி, மாலை 5 – இரவு 8.30 மணி. இராகு காலத்தை ஒட்டி இக்கோயில் செவ்வாய்க்கிழமை மாலை 3- இரவு 8.30 வரையிலும், வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.30 – மதியம் 12.30 வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் சசிவர்ணேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சிவகங்கை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்ததால் சிவனுக்கு சந்திரசேகரர், சோமசேகரர் (சோமன் சந்திரன்), சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பி, சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர் சூட்டினார்.

இங்குள்ள பெரியநாயகி அம்பிகை பிரசித்தி பெற்றவள் ஆவாள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரைப் பிறப்பன்று இவளுக்கு விளக்கு பூஜையும் உண்டு. அன்று, சுவாமி புறப்பாடாவார். இப்பகுதியிலுள்ள பெண்கள் சுகப்பிரசவம் ஆக இவளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக மருந்து குடிப்புஎன்னும் சடங்கை இப்பகுதியில் அதிகம் செய்கின்றனர். சுகப்பிரசவமாக அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்து, அதை பிரசாதமாகப் பெற்று பருகுகிறார்கள். ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இங்கு வந்து இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். கோயிலுக்கு வரமுடியாத பெண்கள் சார்பில் அவர்களது குடும்பத்தார் வந்து, இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு.