Tag Archives: மேல உரப்பனூர்

தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.

“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”

எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர். உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில் மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். வீரச் செயல்கள் புரிந்தவர்கள் இறந்ததும் அவர்களையும் வழிபட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
இவர்களே காவல் தெய்வங்கள்.

 

தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

************************************

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வடமேற்கே ராஜதானி மேல உரப்பனூர். இக்கிராமத்தின் வடஎல்லையில் புளியந்தோப்புக்குள் சிறிய திண்டில் அடங்கியுள்ளார் “தவசி ஆண்டி”.


பல்லாண்டுகளுக்குமுன் தலித் மக்களுக்குத் தத்து(வ)க் கடவுளாக வந்து சேர்ந்தார். இப்பொழுதும் சாமியாடி, பூசாரி ஆகியோர்கள் அவ்வி்னத்து மக்களே. ஆயினும் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாதி, இனப்பாகுபாடின்றி தவசி ஆண்டியை வழிபட்டு வருகின்றனர். தவசி ஆண்டிக்குத் தலபுராணம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் திருமங்கலம் வட்டரத்திலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.


“கண்மாய்க்கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்து, கழனி செழிக்க வைத்து, பசியில்லாது கஞ்சி ஊற்றுகிறார்” என்னும் அசைக்கமுடியா நம்பிக்கை வைத்துள்ளனர் அவ்வூர் மக்கள். தங்கள் கழனிகளில் விளையும் விளைச்சலில் ஒருபங்கைக் காணிக்கையாகக் கொடுத்துவிடுகின்றனர். அதன்பின் மிச்சம்தான் வீடுகளுக்குச் செல்லுகிறது.