Tag Archives: திருவையாறு

தியாகராஜர் பிருந்தாவனம், திருவையாறு

தியாகராஜர் பிருந்தாவனம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94436 62578 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தியாகராஜர்
உற்சவர் தியாகராஜர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவாரூரில் வசித்த சங்கீத வித்வான் இராமபிரும்மம், சாந்தா தேவியாரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இளமையிலேயே இசைப்புலமை பெற்ற தியாகராஜருக்கு எட்டாம் வயதில் தந்தை காயத்ரி, இராமதாரக மந்திர உபதேசம் செய்தார். தந்தையிடமிருந்த இராமர் சிலையை வாங்கி, தினமும் இராம சடாட்சரிமந்திரத்தைப் பாராயணம் செய்து வழிபட்டார். தாயார் அவருக்கு இராமதாசர், புரந்தரதாசரின் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். கல்லூரியில் இராமாயணம் படித்தவருக்கு, இராமர் மீது பக்தி கூடியது. தினமும் 1 லட்சத்து 25 ஆயிரம் முறை இராமநாமம் சொல்லி, 38ம் வயதிற்குள் 96 கோடி முறை பாராயணம் செய்து விட்டார். அவரது 38ம் வயதின் கடைசி நாளில், இராமனை மனமுருகிப் பாடியபோது, வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்தபோது, விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இராம, இலட்சுமணர் செல்வது போலக் காட்சி கிடைக்கப்பெற்றார். பின், பலருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். இவர் காவிரிக்கரையில் ஐக்கியமான இவ்விடத்தில் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.

காவிரியின் வடகரையில் அமைந்த பிருந்தாவனம் இது. தியாகராஜர் ஜீவசமாதியான இடத்தின் மேலே அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் பத்மாசனத்தில் அமர்ந்து, வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். மார்பில் உருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இவருக்கு பின்புள்ள பீடத்தில் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக இலிங்கம் உள்ளது.

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-436 -2260 332, 94430 08104 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்
அம்மன் தரும சம்வர்த்தினி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாது மகரிஷி, ஒரு பெட்டியில் இந்தக் குழந்தையை வைத்துவிட்டு மூடித் திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு, அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர்எனப்பட்டார்.

கரிகால் சோழன் பல்லக்கில் இப்பக்கமாக வந்துகொண்டிருந்த போது தேர்ச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது . அதனை எடுக்கத் தோண்டும்போது குருதி வெளிப்பட்டது . சிவலிங்கமிருப்பதை கண்ட அரசன் தன் தவறுணர்ந்து, தலையை துணிக்க முற்படுகையில் ஈசன் அசரீரியால் தடுத்தார் என வரலாறு கூறும். ஆகையால் கரிகாலன் இக்கோயிலைக் கட்டுவித்தான். சுந்தரரும், சேரமான் பெருமாளும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச்செய்த தலம்.