Tag Archives: திருக்கொள்ளிக்காடு

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 237 454, +91- 4366 – 325 801 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்னீஸ்வரர்
அம்மன் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி
தல விருட்சம் வில்வம் மரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீராளத்தூர்
ஊர் திருக்கொள்ளிக்காடு
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்குத் தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர். இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி, அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியைப் பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார். சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்க ஆளாகிறான். சனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது. அக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் அக்னீஸ்வரர்எனப்படுகிறார். இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். கொள்ளி நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாகையால் கொள்ளிக்காடு என்று பெயர் பெற்றது. இத்தல தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் இத்தலத்தை ஒருகாலத்தில் கரியுரித்தனாயனார் கோயில்என்று அழைத்துவந்ததாகத் தெரிகிறது.