Tag Archives: ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்.

+91-4144-245090 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீ பூவராகன்

உற்சவர்

ஸ்ரீயக்ஞவராகன்

தாயார்

அம்புஜவல்லி

தல விருட்சம்

அரசமரம்

தீர்த்தம்

நித்யபுஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீமுஷ்ணம்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக் கொன்றார். பின் அப்பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரச மரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார். பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீ பூவராகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும். வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.