Monthly Archives: June 2011

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை – 643 001, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 2754 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல்  இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகா மாரியம்மன் , மகா காளியம்மன்
தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் உதகை
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.

அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர்.

அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சக்குளத்துக்காவு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சக்குளத்துக்காவு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான். ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது. பாம்பு மறைந்து விட்டது.