Tag Archives: வெண்ணெய்நல்லூர்

கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
அம்மன் மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
தல விருட்சம் மூங்கில் மரம்
தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்
ஊர் வெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி, சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறைப் பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர்எனப்பெயர் பெற்றார்.

மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில், இறைவன் தீயுருவாகத் தோன்றினான். அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினான்.

திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட்கொண்டார். “நீ எனக்கு அடிமைஎன்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட, அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை, “பித்தன் கிறுக்கன்என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, “என்னப் பற்றி பாடுஎன்று ஈசுவரன் கேட்க, “எப்படிப் பாடுவதுஎன்று சுந்தரர் கேட்க, “என்னைப் பித்தா என்று திட்டினாயே! அதையே பாடுஎன்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானேஎன்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.