Tag Archives: காயாமொழி

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்குவேல் அய்யனார்
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காயாமொழி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்டினர். அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார். தானே விரட்டிச் சென்று தண்டனையம் கொடுத்தார் அய்யனார். இந்த அற்புத நிகழ்ச்சியை இன்றும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி என்று அப்பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் அய்யனார் விழாவில், கடைசி நாளாக நடைபெறும் கள்ளர் வெட்டு வைபவத்தைக் காண அண்டை மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.