Tag Archives: ஆறுபாதி

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்) திருக்கோயில், திருவிளநகர்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்) திருக்கோயில், திருவிளநகர்(ஆறுபாதி), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364 – 282 129 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார், வஜ்ரவனேஸ்வரர்)
அம்மன் வேயுறுதோளியம்மை
தல விருட்சம் விழல் என்ற புல்செடி
தீர்த்தம் காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் விழர்நகர், திருவிளநகர்
ஊர் திருவிளநகர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக, கூடை நிறைய பூ எடுத்துக்கொண்டு ஆற்றைக்கடந்து வருவான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடச்செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆற்றின் கரையை நோக்கி செல்ல போராடினான். இதனால் இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்கு பூவை கொண்டு செல்லக் காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இறைவனைப் பிரார்த்தித்தான்.

இவனது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ஆற்றின் துறையைக் காட்டி உதவினார். அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. இதனால் இறைவன் துறை காட்டும் வள்ளல்ஆனார்.