Tag Archives: திருவல்லிக்கேணி

திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 -2841 8383, 2851 1228

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவேட்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் செண்பகாம்பிகை
தல விருட்சம் செண்பக விருட்சம்
தீர்த்தம் செண்பக தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.

சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் திருவேட்டீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 – 2844 4054

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தீர்த்தபாலீஸ்வரர்
அம்மன் மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கடல்தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல் தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் தீர்த்த பாலீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பது புராணம். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது.