Tag Archives: நெமிலிச்சேரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி, சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் ஆனந்தவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெமிலிச்சேரி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை இலிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த இலிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.