Tag Archives: திருநாரையூர்

அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர்

அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயனார்
அம்மன் பூரணை, புஷ்கலை
தல விருட்சம் வேப்பமரம், ஆலமரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருநாரையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஐயனார் வழிபாடு பிரபலம் அடைந்து விட்டது. தமிழகத்தில் தொன்மையான ஊர்களில் வடக்கில் பிடாரியும், தெற்கில் ஐயனாரும் கோயில் கொண்டுள்ளனர். ஐயனார் என்பவர் பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுளாவார். கையனார் என்ற சொல்லே பிற்காலத்தில் ஐயனார் ஆயிற்று என்றும் கூறுவர். மிகவும் புகழ் பெற்ற தலமான திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஐயனாரும் புகழ், பெருமைக்குரிய கடவுளாவார். தெய்வ அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் திருஅவதாரத் தலம் திருநாரையூர் ஆகும். ஒருமுறை நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்து மாலை வேளையில் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பகுதி அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அச்சமயம் அவளுக்குப் பிரசவ வலி வந்துவிடவே துணைக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறாள். அப்பொழுது ஐயனார் ஒரு பெண்ணாகத் தோற்றம் பெற்று நல்ல முறையில் குழந்தை பிறக்கச் செய்தார். பின் இரவு முழுவதும் அவளுக்கு துணையாக இருந்து விட்டு விடிந்தவுடன் மறைந்து விட்டார். அதன்பிறகுதான், தனக்குத் தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியவர் ஐயனார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் அடிப்படையில் ஐயனாருக்கு இங்கு கோயில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர்

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர், காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம்.

+91- 94425 71039

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் செங்கழுநீர் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநாரையூர்
ஊர் திருநாரையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம், “தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்குத் தீர்த்தம் கொண்டு வந்து, தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும்என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

நம்பியாண்டார் நம்பயின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்குத் தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பிள்ளையாரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.