Tag Archives: கோவிலூர்

அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர்

அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர், தர்மபுரி மாவட்டம்.

+91-4348- 247 487 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சென்னகேஸ்வர பெருமாள்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோவிலூர்
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

17ம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் இருந்தபோது, இந்த கோயிலுக்கு மன்னர்களால் ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. எனவே இவ்வூருக்கு ஸ்ரோதிரியம் கோவிலூர் என்ற பெயர் இப்போதும் இருக்கிறது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வரப் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை ஏழுமலையான் வெங்கடாசலபதியின் மூத்த சகோதரர் என சொல்கிறார்கள். பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார்.

இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது.

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 262 014, 99420 39494 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்)
அம்மன் பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் மார்க்கண்டேயர், அனுமன், குஞ்சிதம், கவுதம தீர்த்தம், நெல்லி தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவுசாத்தானம், கோயிலூர்
ஊர் கோவிலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் பின் தொடருகிறான். கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாகக் காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார். பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு கோயில் உருவானது.

இராமர் இலங்கை செல்லவும், போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் அணை கட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கரைத்து விடுகின்றன. தடைகளை நீக்க வேண்டி இராமர் இத்தலம் வந்து மந்திர ஆலோசனை பெற்று இராமமேஸ்வர கடலில் பாலம் கட்டியதாகவும், இந்த அணையே நிலையாக இருந்தது என்று வரலாறு கூறுகின்றன. எனவே இறைவன் மந்திரபுரீஸ்வரர்என வழங்கப்படுகிறார். இராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார். இராமர் இத்தல இறைவனிடம் கடலில் அணைகட்டுவதற்குரிய வழிவகைகளை உசாவிய (கேட்டு தெரிந்து கொண்ட) இடமாதலால் இத்தலத்திற்கு திருவுசாத்தானம்என பெயர் ஏற்பட்டது. பாற்கடலில் அமிர்தம் கடையும் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.