Tag Archives: கோவிந்தவாடி

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி

அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 3720 9615, 93809 57562 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
தலவிருட்சம் ஆலமரம்
ஆகமம் காமிகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோவிந்தவாடி
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனைக் காக்கப் போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துதீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது. தனது முதன்மையான ஆயுதமான சக்கரம் பயனில்லாமல் போனதால் மகாவிஷ்ணு ஆயுதம் இன்றி இருந்தார். எனவே, அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க என்ன செய்வதென்று தேவர்களுடன் ஆலோசனை செய்தார். சிவனை வேண்டினால் சக்கரம் கிடைக்கும் என அறிந்து கொண்டார்.

சிவனை வணங்கி அருள்பெற சிவதீட்சைபெற வேண்டும் என்பது நியதி. எனவே அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இத்தலம் வந்தார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவனை எண்ணித் தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார். மேலும், இத்தலத்திற்கு அருகில் உள்ள திருமால்பூரில் இலிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும் என்றும் கூறினார். அதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார். மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தியாகஅருளுகிறார்.