Tag Archives: லால்குடி

சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி

அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி, திருச்சி மாவட்டம்.

+91 431 2541 329

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சப்தரிஷிஸ்வரர்
அம்மன் சிவகாம சுந்தரி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவத்துறை
ஊர் லால்குடி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.

அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனைக் கொண்டுவந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். ஏழு பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்குப் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.