Tag Archives: திருச்சிறுகுடி

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி, திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களநாதர்
அம்மன் மங்களாம்பிகை
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிறுகுடி
ஊர் திருச்சிறுகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனைத் தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வமரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் இலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார். இதனால் அம்பிகை மங்களாம்பிகைஎன்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை மங்கள தீர்த்தம்ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர்என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனைக் காப்பாற்றச் சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்துஎன சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார். இக்கோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.