Tag Archives: தஞ்சாவூர்

அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சங்கர நாராயணர்

தாயார்

பாலாம்பிகா

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

தஞ்சாவூர்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

தஞ்சையை பீம சோழன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி பத்ராட்சி. மன்னன் இறைப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல அறச் செயல்களைப் புரிந்து வந்தான். தன் பெயராலேயே பீமேஸ்வரர் ஆலயம் கட்டினான். சிறந்த பக்திமானாகத் திகழ்ந்த மன்னனுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. இதனால் மனம் வருந்திய மன்னனும் அரசியும் புத்திரப் பேறு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். ஒருநாள் பீம சோழனின் மனைவியின் கனவில் சிவபெருமான் தோன்றி, “தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரருக்கும் கொங்கணேஸ்வரருக்கும் இடையில் சங்கர நாராயணர் என்ற பெயரில் எனக்கும் விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்ட வேண்டும். நான் அந்த இடத்தில் லிங்க ரூபமாக இருக்கிறேன். இக்கோயில் கட்டும் பணியைச் செய்தால் உங்களுக்குப் புத்திரப் பேறு கிட்டும்எனக் கூறி மறைந்தார். கனவில் கண்டதைக் கணவனிடம் தெரிவித்தாள் பத்ராட்சி. வியப்படைந்த மன்னன் மந்திரிப் பிரதானிகளை அழைத்துக் கொண்டு இறைவன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போது, பிரகதீஸ்வரர் கோயிலுக்கும் கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். இறைவன் கூறியபடியே அந்த இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்தான். அப்போது அசரீரியாக சிவபெருமான், அருகே உள்ள கிணற்றில் பாவங்களைப் போக்க வல்ல குப்த கங்கை பொங்கி வருவதாகவும்; விசாக நட்சத்திரத்துடன் கூடிய திங்கட் கிழமையில் அதில் நீராடி, பக்தி சிரத்தையுடன் வணங்கி வந்தால் மன்னனுக்குப் புத்திரப் பேறு கிட்டும் எனவும் கூறினார். சிவபெருமான் வாக்கின்படி சோழ மன்னன் சங்கர நாராயணருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தான். இறைவன் அருளால் ஒரு ஆண்மகவு பிறந்தது என்கிறது தல வரலாறு.

மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம்.

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 99433 81527 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாகக் கர்ண பரம்பரை கதை வாயிலாக அறிய முடிகிறது. எனவே தான் இவருக்கு பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு மூலை அனுமார் என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகள் உள்ளது. மூலை அனுமார் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தனக்கு கோயில் எழுப்பும்படி தஞ்சை மன்னனுக்கு ஆணையிட்டார். எனவே பக்தர்களால் மூலை அனுமார் என பெயர் சூட்டப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோயில் அருகிலேயே கோயில் அமைக்கும்படி ஆணையிட்டார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் புகழ் பெற்றது. குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. பாம்பு, நிலவை கவ்வி பிடிக்க வருவது போன்ற சிற்பமும் இங்கு உள்ளது. இதை கண்டவர்களுக்கு இராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வேப்பமரத்தை அம்பாளாகக் கருதுகின்றனர். அம்பாள் இராம நாமத்தை வேப்பமர வடிவத்தில் நின்று கேட்பதாக நம்பிக்கை.