Tag Archives: சீயாத்தமங்கை

அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை

அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+9-4366-270 073 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்
அம்மன் உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சாத்தமங்கை, கோயிற்றிருச்சாத்தமங்கை
ஊர் சீயாத்தமங்கை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார். அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி, அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி, அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி, அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, இலிங்கோற்பவர், பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் இரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார். கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.