Tag Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 98949 06455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
உற்சவர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் வீரகங்கை
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவராததானி
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க, சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது. இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.

வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும்.

அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில், நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 99941 98391, 94429-29270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

மெய்கண்டமூர்த்தி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

நாகப்பட்டினம்

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம் தமிழ்நாடு

இந்தக் கோயிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். இந்தக் கோயிலில், முருகனுக்கு மெய்கண்டமூர்த்திஎன்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில்என்றானது. நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.