Tag Archives: அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 435-244 9578 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 – இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்னிபுரீஸ்வரர்
அம்மன் கவுரி பார்வதி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅன்னியூர், திருவன்னியூர்
ஊர் அன்னியூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து, தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து இலிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து, சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர்ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர்ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

சிறிய கோயில். சிறிய இராஜகோபுரம். உள்நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால் சொறிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ளார். வினாயகர், பாலசுப்ரமணியர், கஜலட்சுமி சன்னிதிகளும், தலமரம் வன்னியும் உள்ளன.