Tag Archives: உக்கடம்

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம்

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம், லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரிவரதராஜப் பெருமாள்
தாயார் பூமி நாயகி, நீளா நாயகி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் உக்கடம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தான். ஒரு முறை அவன் கொங்கு தேசம் எனப்படும் இப்பகுதிக்கு வந்தபோது காஞ்சி வரதராஜப் பெருமாளைத் தரிசனம் செய்ய விரும்பினான். அதன் அடிப்படையில் இங்கு ஒரு கோயில் கட்டி, பெருமாளைப் பிரதிஷ்டை செய்து கரிவரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபட்டான்.

கொங்கு நாட்டிலுள்ள பெருமாள் கோயில்களில் இக்கோயிலுக்குள்ள தனிச்சிறப்பு, உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதுதான். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் வடக்கு முகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தற்போது பாதுகாப்பு கருதி தெற்கு வாயில் மூடப்பட்டுள்ளது.