Tag Archives: சிவபுரம்

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம்

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 98653 06840 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்
அம்மன் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் சந்திர புஷ்கரணி, சுந்தர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குபேரபுரம், திருச்சிவபுரம்
ஊர் சிவபுரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்து, பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று சுவாமிகள் துறைஎன்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார். குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.

பழமையான கோயில். 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. கொடி மரம் இல்லை. பலி பீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் 3 நிலைகள் கொண்டது. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சன்னிதி. முன்னால் விசாலமான கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவற்றில் சன்னிதியை பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. விசாலமான பிரகாரம். கோஷ்ட மூர்த்தங்களாக நடன வினாயகரும், பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தியும், அடுத்து இலிங்கோற்பவரும், பிரம்மனும், துர்கையும் உள்ளனர். நால்வர் பிரதிஷ்டையில் பரவை நாச்சியாரும் இடம் பெற்றுள்ளார். வெளிச்சுற்றில் வினாயகர் சன்னிதியும், அடுத்து சுப்பிரமனியர், கஜலக்ஷ்மி சன்னிதிகளும் உள்ளன. மூலவர் பெரிய கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. முன் மண்டபத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் பாரவன்காண்என்று தொடங்கும் பாடலில் பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்என்று பாடியுள்ளார்.