Tag Archives: திருநாவலூர்

பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர்

அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம்

+91- 94861 50804, 94433 82945, 04149-224 391

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்
அம்மன் மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி
தல விருட்சம் நாவல்மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம் காமிக ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் திருநாவலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அமிர்தத்தை கடைந்த காலத்தில், வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை, இறைவன் சாப்பிட்டு விடுகிறான். அதில் கொஞ்ச நஞ்சு, வித்தாக மாறி, பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில், இறைவன் தானாகத் தோன்றி, 4 யுகங்களாக இங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கருவறை மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது மிகப் பழமையான கோயில் ஆகும். ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில், சுந்தரர், “ஜம்புஎன்ற வடமொழிப் பெயரை நாவல்என்று அழைத்து திருநாவலீசன்என்று ஈசனையும் திருநாம நல்லூர்என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இங்குதான், இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்தது. ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து, பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினிமந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினிமந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.