Category Archives: சிவ ஆலயங்கள்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர்

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 99422 67660, 95785-72989

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி)

மூலவர் சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தெற்கு பொய்கைநல்லூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில், இலுப்பமரக்காடாக இருந்த நாகப்பட்டினத்தில், காவல் தெய்வத்துக்கு கோயில் கட்ட அங்கிருந்த வணிகர்கள் முடிவு செய்தனர். விக்ரகங்கள் செதுக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு தான் கோயிலுக்கான அஸ்திவாரம் பொய்கைநல்லூர் பகுதியில் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியிலிருந்து சுவாமி, முருகன் வள்ளி, தெய்வானை சிலைகளும் பரிவார மூர்த்தி சிலைகள் கிடைத்தன. கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். தற்போதைய அம்பாள் சன்னதி அருகிலுள்ள பின்ன மரத்தை வெட்டும் போது, மரப் பொந்துக்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மரப்பொந்தில் முருகன், வள்ளி, தெய்வானை என பல சிலைகள் கிடைத்தன. மரப்பொந்தில் இருந்து கிடைத்த சிலைகளை கோயிலுக்குள்ளும், ஏற்கனவே செய்து வைத்திருந்த சுவாமி சிலைகளை கோயிலுக்கு வெளியேயும் பிரதிஷ்டை செய்தனர். இந்த கோயிலின் மூலவருக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினர். இவர்கள் அருகில் செல்லியம்மன் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அம்மனுக்கு நாகம் காவலாக இருப்பதாக நம்பிக்கை. அம்மன் கோயில் கதவுக்கு முன்பக்கம் நாகம் படுத்திருப்பதாகவும், பூஜாரி கதவை திறந்தவுடன், மணி சப்தம் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபட்டு பலனடையலாம். இந்த தோஷம் நீங்கினால், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு வாழ்க்கைத்துணை விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார்

அருள்மிகு சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 209

காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொரிமுத்தைய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பாணதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரையார்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக மூலாதாரம் என்று சொல்லப்படும் அளவிற்கு கோயில் இது. பொதிகை மலை மீது அமைந்த கோயில் இது.
கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே பிற்காலத்தில் தர்மசாஸ்தாவும், சொரிமுத்தைய்யனாராக எழுந்தருளினார். இவர் இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலைத் தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவரது சன்னதியில் சப்தகன்னியர்களும் இருப்பது விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். எதிரே நந்தி, யானை, குதிரை வாகனங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருக்கிறது.