அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.

+91- 8386 – 256 167, 257 167 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி
தீர்த்தம் கோடி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோகர்ணம்
ஊர் திருக்கோகர்ணம்
மாவட்டம் உத்தர் கன்னடா
மாநிலம் கர்நாடகா
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் அரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது.

கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட இராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டிக் கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், “இராவணன் இந்த இலிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் இராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த இலிங்கத்தை இராவணனிடம் கொடுக்கும் முன், “இராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதைக் கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராதுஎனக் கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த இலிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,”நீ பிரமச்சாரி வேடத்தில் இராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. இராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் இலிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம், இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், இலிங்கத்தைக் கீழே வைத்து விடுவேன் என்று சொல்என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த இலிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டுச் சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண இலிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை இராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் இராவணன் வராத காரணத்தினால் இலிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த இலிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டிக் கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த இராவணன், இலிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் இலிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான். பிறகு தேவர்கள், தேவசிற்பியை அழைத்து இலிங்கத்தைச் சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர்என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை தாமிரகவுரிஎன்றும் அழைக்கின்றனர்.

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர்

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 480-281 2061 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்
அம்மன் உமையம்மை
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சிவகங்கை
பழமை 2000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் திருவஞ்சிக்குளம்
ஊர் திருவஞ்சிக்குளம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா
பாடியவர் சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.