அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர்

அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர், திண்டுக்கல் மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பணசாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அய்யலூர்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் கேரளாவிலிருந்து வணிகர்கள் பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, தமிழகம் வருவது வழக்கம். அப்படியொரு முறை வணிகர் கூட்டம் ஒன்று மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் தானாக நின்று போனது மாட்டுவண்டி. அந்த வண்டியின் முன்புறம், பாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கல், அந்த இடத்திலேயே கருப்பண்ணசாமியாக உருவெடுத்தது. அவரையே காவல் தெய்வமாக எண்ணி மக்கள் கோயில் எழுப்பினர். கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் (கலயம்) வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம். இதற்காக வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது. இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக்கூடாது.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர்

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

+91- 4286 – 256 400, 256 401, 255 390

(மாற்றங்களுக்குட்பட்டவை)

அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் தொடர்ந்து கோயில் திறந்திருக்கும்.

மூலவர் கருப்பசாமி
உற்சவர் நாவலடியான்
அம்மன் செல்லாண்டியம்மன்
தல விருட்சம் நாவல்
தீர்த்தம் காவிரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மோகனூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு, தூங்கி விட்டனர். மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது, கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசுவாமி, தானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும்படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து, கருப்பசாமியாகப் பாவித்து வணங்கினர்.
இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் நாவலடியான்என்றும், “நாவலடி கருப்பசாமிஎன்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர்.