அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 262 014, 99420 39494 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்)
அம்மன் பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் மார்க்கண்டேயர், அனுமன், குஞ்சிதம், கவுதம தீர்த்தம், நெல்லி தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவுசாத்தானம், கோயிலூர்
ஊர் கோவிலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் பின் தொடருகிறான். கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாகக் காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார். பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு கோயில் உருவானது.

இராமர் இலங்கை செல்லவும், போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் அணை கட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கரைத்து விடுகின்றன. தடைகளை நீக்க வேண்டி இராமர் இத்தலம் வந்து மந்திர ஆலோசனை பெற்று இராமமேஸ்வர கடலில் பாலம் கட்டியதாகவும், இந்த அணையே நிலையாக இருந்தது என்று வரலாறு கூறுகின்றன. எனவே இறைவன் மந்திரபுரீஸ்வரர்என வழங்கப்படுகிறார். இராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார். இராமர் இத்தல இறைவனிடம் கடலில் அணைகட்டுவதற்குரிய வழிவகைகளை உசாவிய (கேட்டு தெரிந்து கொண்ட) இடமாதலால் இத்தலத்திற்கு திருவுசாத்தானம்என பெயர் ஏற்பட்டது. பாற்கடலில் அமிர்தம் கடையும் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர், பொன்னிரை, திருவாரூர் மாவட்டம்.

+91- 94427 67565 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்வைத்த நாதர் (சொர்ணஸ்தாபனேஸ்வரர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் ஆத்திமரம்
தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி
ஆகமம் காரண, காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிற்றேமம், எழிலூர் நேமம், சிற்றாம்பூர், சிற்றாய்மூர்
ஊர் சித்தாய்மூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

தலத்தின் தேவாரப்பெயர் திருச்சிற்றேமம். இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சில நாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி, சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்குப் பூமாலை தொடுத்துக் கொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் பொன்வைத்த நாதர்எனப்பட்டார். சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்குத் தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. “கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படிக் கர்ப்பமடைந்தாள்என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள். உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்குப் பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள். அதற்கு கணவன்,”நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும்என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனை மனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது.