அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி

அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி, பழைய வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம்.

+91 98658 26387 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

மூலவர்

சென்றாயப்பெருமாள்

உற்சவர்

சென்றாயப்பெருமாள்

தாயார்

ருக்மிணி, சத்யபாமா

தல விருட்சம்

உசிலை மரம்

தீர்த்தம்

கிருஷ்ணர் தெப்பம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோட்டைப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

கிருஷ்ண தேவராயர் வம்சாவளியைச் சேர்ந்த ஆதிசென்னம்ம நாயக்கர் என்ற பெருமாள் பக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். இங்குள்ள குன்றில் பசுக்களை மேய்ப்பது அவரது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது ஒரு பசு மட்டும் இல்லாதைக் கண்டார். எனவே, பசுவைத்தேடிக் குன்றுக்கு வந்தார். ஓரிடத்தில் அந்த பசு நின்றிருக்க, அதன் மடியில் சிறுவன் ஒருவன் பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். குட்டி போடாத பசுவிடம் சிறுவன் பால்குடிப்பதைக் கண்டவருக்கோ ஆச்சர்யம். இது இறைசெயலாகவே இருக்க வேண்டுமெனக் கருதியவர் மறைவாக நின்று கொண்டார். அப்போது சிறுவன் அவரை அழைத்து, பெருமாளாக சுயரூபம் காட்டினார். அவரிடம், தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோயில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோயில் எழுப்பினார். பக்தர்களுக்கு ஓடிச் சென்று அருள்புரிபவர் என்பதால் சுவாமிக்கு சென்றாயப்பெருமாள்என்ற திருநாமம் அமைந்தது.

சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே வழிபடுகின்றனர். எனவே, உடன் தாயார்கள் கிடையாது. ஆனாலும் இவர் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. உற்சவர் ருக்மிணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ணலீலை, இராமாவாதாரம் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடுவர். ஓணம் பண்டிகையன்று இவருக்கு மூன்று நாள் யாகசாலையுடன் விசேஷ பூஜைகள் உண்டு. அன்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிப்பர்.

அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை

அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டம்.

+91-4344 – 292 870 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பேட்டைராயசுவாமி

உற்சவர்

தேவபெருமாள்

தாயார்

சௌந்தர்யவல்லி

தல விருட்சம்

இலந்தை மரம்

தீர்த்தம்

சுவாமி புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

டென்கனிக்கோட்டை

ஊர்

தென்கனிக்கோட்டை

மாவட்டம்

தர்மபுரி

மாநிலம்

தமிழ்நாடு

கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால்(ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து, முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.

விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி, கோபுரத்தின் உச்சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்பது ஐதீகம். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது.