அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 262 014, 99420 39494 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்)
அம்மன் பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் மார்க்கண்டேயர், அனுமன், குஞ்சிதம், கவுதம தீர்த்தம், நெல்லி தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவுசாத்தானம், கோயிலூர்
ஊர் கோவிலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் பின் தொடருகிறான். கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாகக் காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார். பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு கோயில் உருவானது.

இராமர் இலங்கை செல்லவும், போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் அணை கட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கரைத்து விடுகின்றன. தடைகளை நீக்க வேண்டி இராமர் இத்தலம் வந்து மந்திர ஆலோசனை பெற்று இராமமேஸ்வர கடலில் பாலம் கட்டியதாகவும், இந்த அணையே நிலையாக இருந்தது என்று வரலாறு கூறுகின்றன. எனவே இறைவன் மந்திரபுரீஸ்வரர்என வழங்கப்படுகிறார். இராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார். இராமர் இத்தல இறைவனிடம் கடலில் அணைகட்டுவதற்குரிய வழிவகைகளை உசாவிய (கேட்டு தெரிந்து கொண்ட) இடமாதலால் இத்தலத்திற்கு திருவுசாத்தானம்என பெயர் ஏற்பட்டது. பாற்கடலில் அமிர்தம் கடையும் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.

மார்க்கண்டேயர் தன் மீது எமன் வீசிய பாசக்கயிறின் வடுக்கள் நீங்குவதற்காக இங்கு திருக்குளம் அமைத்து வழிபாடு செய்துள்ளார். சிதம்பரத்தில் மாலை நேரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை காணமுடியாமல் வருந்திய விஸ்வாமித்திரர் இத்தலம் வருகிறார். இவரது வருத்தத்தை போக்க இங்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிதம்பரத்தில் ஆடிய தாண்டவத்தை விஸ்வாமித்திரருக்கு இறைவன் காட்டுகிறார். எனவே இத்தலம் சிதம்பரத்திற்கு இணையாக கோயில் ஆனதால், “ஆதிசிதம்பரம்என்றும் கோவிலூர்எனவும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, இராமருக்கு வெற்றி கிடைத்த தலமாதலால் இத்தலத்தை நினைத்தாலே வெற்றி. வேத மந்திரங்கள் படிப்பவர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. அஷ்டாவக்ர முனிவரால் வருணபகவானுக்கு ஏற்பட்ட தொழு நோய், இத்தல இறைவனை வணங்கியதால் நீங்கியது. வழக்கமாக எருமைத் தலையின் மீது அருள்பாலிக்கும் துர்கை, இத்தலத்தில் எருமை இல்லாமல் அருள்பாலிக்கிறாள். இத்தல விநாயகரின் திருநாமம் சூதவன விநாயகர்.”

கோயில் 5 நிலை இராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் விளங்குகிறது. கோயிலின் மேற்கு பகுதியில் வருணன் பூஜித்த இலிங்கம், இராமர் பூஜித்த இலிங்கம், மார்க்கண்டேயர் பூஜித்த இலிங்கம், விஸ்வாமித்திரர் பூஜித்த இலிங்கம் உள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். கருவறைச்சுவரில் ஜுரகரேஸ்வரர் மூன்று முகங்களுடனும், மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார்.

தேவாரப்பதிகம்:

நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 107வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடக்கிறது. ஆனியில் நடராஜர் திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்மன் புறப்பாடும், ஆவணி மூலத்தில் அபிஷேக ஆராதனையும், சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *