அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்.

+91- 4286 – 233 999, 94438 26099

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நாமக்கல்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார். இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார். அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காணத்தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என இலட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது. தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் லட்சுமி நரசிம்மர்எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

குடவறை சிற்பமாக உள்ள இலட்சுமி நரசிம்மர் கூரிய நகங்களுடன் இருக்கிறார். இரணியனை சம்காரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் இரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி, திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கல்லுக்குழி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயில் கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்புரிந்து கொண்டிருந்தார். அங்கு பணியாற்றும் ரயில்வே ஊழியர்களும், பயணிக்க வந்த மக்களும் இவரை வழிபடுவது வழக்கம்.


1928-
ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டுப் பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக பதவி வகித்த திரு. ஆர்ம்ஸ்பி என்ற வெள்ளைக்காரர் ரயில்வே நடைபாதை ஓரத்திலிருந்த ஆஞ்சநேயரை அகற்ற உத்தரவிட்டார். அந்தச் சிறிய கோயில் இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை. அன்றிரவு, வெள்ளைக்கார ரயில்வே பொது மேலாளர் அந்த விக்கிரகம் இருந்த இடத்தில் அருகில் இரண்டு இரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார். காலையில் அவசர அவசரமாக எழுந்து வந்து பார்த்தால், அவர் கனவில் கண்ட காட்சி அப்படியே இருப்பதைக் கண்டு அதிசியத்தார். இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப்பட்டது. அப்பொழுதான் அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குத் தன் தவறு புரிந்தது. உடனே, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த இரயில் நிலையத்திற்கு அருகிலேயே வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் தான் கல்லுக்குழி. ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தாராம். கோயில் முழுவதுமாக உருவானதும், ஒரு சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட் பாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்ற முடிந்ததாம். புதிய இடத்தில் கல்லுக்குழி என்று சொல்லப்படும் இரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கட்டப்பட்ட கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.